மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
By: TeamParivu Posted On: December 03, 2023 View: 49

சென்னை: "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "கடந்த டிச.1 மற்றும் டிச.2 ஆம் தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு நான் ஏற்கெனவே அறிவுரை வழங்கியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,967 இதர பாதுகாப்பு மையங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து வரக்கூடிய மக்களை முன்கூட்டியே அழைத்துவந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகளின் மூலம், மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதிலும் மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பிவைக்கப்பட்டது. இதன்மூலம் அனைத்து படகுகளுக்கும் ஒரு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து ஊடகங்கள் மூலம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம். புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும் தொடர்ந்து எச்சரிக்கை வெளியிட்டு வருகிறோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில அவசரகால செயல்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மின்துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..